தாய்லாந்தில் நெடுந்தொலைவு ஓட்ட வீராங்கனை, வழியில் நாய்க்குட்டி ஒன்றைக் கண்டெடுத்தார். அதனைத் தூக்கிக்கொண்டே ஓடி அவர் தன் ஓட்டத்தை முடித்தார். ஜனவரி 20ஆம் தேதி மேற்கு தாய்லாந்தில் 'சொம்புவெங்' நெடுந்தொலைவு ஓட்டத்தில் குமாரி கெம்ஜிரா கிலோங்சானுன் 12 கிலோமீட்டர் தூரம் ஓடி முடித்தபோது அவர் ஓடிய சாலைத்தடத்திற்கு அருகே நாய்க்குட்டியைக் கண்டதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாய்க்குட்டியைத் தமது கைகளில் தூக்கியபடியே குமாரி கிலோங்சானுன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கையில் அந்நாய் அமைதியாக காணப்பட்டது.
குமாரி கிலோங்சானுன் நாய்க்குட்டியின் படத்தைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து, அதன் வழியாக உரிமையாளரைத் தேட முயன்றார். இதுவரை எவரும் முன்வராததால் இந்த நாயைத் தன்னிடமே வைத்துக்கொண்டார் அந்த வீராங்கனை.