மலேசியாவின் பாஹாங் மாநிலத்திலுள்ள பெக்காட் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் அறுவர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சம்பவம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நிகழ்ந்ததாக மாவட்ட போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாந்தானிலிருந்து செகாமாட்டிற்குச் சென்றுகொண்டிருந்த கார், பக்கத்துத் தடத்தில் எதிரே வந்துகொண்டிருந்த மற்றொரு காருடன் உரசியதைத் தொடர்ந்து, முதல் கார், அந்தத் தடத்திற்கு மாறி அவ்வழியே சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகக் கூறப்படுகிறது. பக்கத்துத் தடத்திற்குத் தள்ளப்பட்ட இரண்டாவது கார், அங்கு மற்றொரு காருடன் மோதியது.
இந்த விபத்தில் 51 வயது அப்துல் ஜமில் அப்துல் ரஹ்மானும் 11 மாத ஆண் குழந்தை முகம்மது கைரல் தகிஃப் முகம்மது ஷுஐப்பும் மாண்டதாக போலிசார் உறுதி செய்தனர். சம்பவம் குறித்த போலிசாரின் விசாரணை தொடர்கிறது.