சீனாவின் தெற்குப் பகுதியிலுள்ள குவான்ஸி மாநிலத்தில் பட்டாசு வெடித்ததில் ஐவர் மாண்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ரொங்கான் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 2 மணி வாக்கில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சட்டவிரோதமாக வெடிபொருட்களைப் பதுக்கிவைத்து, அவற்றை விற்றுவந்ததாகச் சந்தேகிக்கப்படும் கடை ஒன்றுக்கு அருகே இந்த வெடிப்பு நடந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பட்டாசு வெடிப்பால் மூண்ட தீ, சுற்றியிருந்த வீடுகளுக்குப் பரவியது. இந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் மாண்டதுடன் 14 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டியிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
சீனப் புத்தாண்டின்போது பட்டாசுகளை வெடிப்பது அந்நாட்டின் கலாசார வழக்கம். பட்டாசு வெடிப்புகளால் நிகழும் அசம்பாவிதங்களின் காரணமாக சீனாவில் இதுவரை 499 நகரங்கள் இந்த வழக்கத்தைத் தடை செய்துள்ளன.