மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் கார் ஒன்று மற்றொரு காருடன் மோதியதில் மூன்று சகோதரிகள் மாண்டதாக மலேசிய ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணிக்கு நிகழ்ந்தது. சகோதரிகளில் ஆக மூத்தவளான 23 வயது நூர்ஃபாதின், அப்போது 'பெரொடா மைவி' வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார்.
வாகனம் சென்றுகொண்டிருந்த தடத்திற்குப் பக்கத்தில் உள்ள எதிர்திசைத் தடத்தில் 'புரோட்டான் வீரா' கார் சென்றுகொண்டிருந்து. தனக்கு முன்னே இருந்த வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட அந்த 'புரோட்டான் வீரா', பக்கத்து தடத்திற்கு மாறி எதிரே வந்த 'பெரொடா மைவி' காருடன் மோதியது.
சம்பவ இடத்திலேயே நூர்ஃபாதினும் அவரது 10 வயது தங்கை அனிஸ் சரயாவும் மாண்டனர். 22 வயது ஹைஃபா அமிரா பாசிர் மாஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
'புரோட்டான் வீரா' காரின் ஓட்டுநர் 21 வயது முகம்மது ஹெல்மி முஸ்தாஃபா பலமாகக் காயமடைந்தார்.