போதைப்பொருள் கடத்தல் தொழில் நடத்திவந்த ஜோகின் 'எல் சாபோ' கஸ்மனின் குற்றங்கள் நேற்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் உயர்ரக சிறையில் அடைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 'எல் சாபோ', அமெரிக்காவிற்குள் போதைப் பொருள் கடத்தி வரும் தொழிலைப் பெரிய அளவில் செய்துவந்துள்ளார். சினாலுவா கார்டெல் எனும் கடத்தல் கூட்டமைப்பின் தலைவரான 61 வயது 'எல் சாபோ', மெக்சிகோவின் உயர் பாதுகாப்புச் சிறைகளிலிருந்து இரு முறை தப்பியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு பிடிபட்ட அவர், 2017ஆம் ஆண்டில் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
1994ஆம் ஆண்டு கொலோராடோவின் ஃபுளோரன்ஸ் பகுதியில் உள்ள 'ஏடிஎக்ஸ்' எனும் உச்ச நிர்வாக மைய சிறைச்சாலை திறக்கப்பட்டதிலிருந்து அங்கிருந்து எவரும் இதுவரை தப்பியோடவில்லை.
அமெரிக்க சிறைச்சாலைகளில் மிக பயங்கரமான கைதிகளை அடைக்கும் இடமாக அந்த வளாகம் செயல்படுகிறது.