தென்கொரியாவில் நூற்றுக்கணக்கான நாய்களைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நடவடிக்கை கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்.
அந்நாட்டின் தலைநகர் சோலுக்கு 150 கிலோமீட்டர் கிழக்கே இருக்கும் ஹொங்சியோங் என்ற ஊரிலுள்ள நாய்ப்பண்ணை ஒன்றிலிருந்து சுமார் 200 நாய்கள் காப்பாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்பு கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
தென்கொரியாவில் ஆண்டுக்குச் சுமார் ஒரு மில்லியன் நாய்கள் சாப்பிடப்பட்டு வருகின்றன. நாய் இறைச்சியை உட்கொள்வதால் உடல் சுறுசுறுப்பாகும் என்று அதை உண்பவர்கள் நம்புகின்றனர். ஆயினும், நாய்களைச் செல்லப்பிராணியாக வைத்து வளர்க்கும் வழக்கம் தென்கொரியாவில் அதிகரித்து வர, அவற்றை உணவாகச் சாப்பிடும் வழக்கம் குறைந்துள்ளது.