தைவானிய அதிபர் சாய் சை வன், அடுத்தாண்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தாம் நிற்க போவதாக அறிவித்திருக்கிறார்.
திருவாட்டி சையை ஆதரிப்பவர்களின் விகிதம் குறைந்துவரும் வேளையில் அவருக்கு எதிராக சீன அரசாங்கம் கொண்டுள்ள பகைமைப்போக்கு அதிகரித்துள்ளது. ஆயினும் தைவானுக்கான தமது குறிக்கோள்களை நிறைவேற்ற விரும்புவதாகவும் எதிர்ப்புகளால் பின்வாங்கப் போவதில்லை என்றும் திருவாட்டி சை, 'சிஎன்என்' செய்தி நிறுவனத்திடம் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
"எந்த ஒரு நாட்டிலும் தற்போது தலைவராக இருப்பவர் தனது நாட்டுக்கு மேன்மேலும் செய்ய ஆசைப்படுவர்," என்று அவர் பேட்டியின்போது கூறினார்.
சுயசார்பு ஆட்சிமுறை கொண்ட தைவானின் முதல் பெண் அதிபராக திருவாட்டி சை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தைவானின் பொருளியலை மறுசீரமைக்க அவர் தமது தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்ததை அடுத்து அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் கடந்தாண்டு நவம்பர், அவரது கட்சியான டிபிபி, உள்ளாட்சித் தேர்தல்களில் படுதோல்வியை அடைந்ததைத் தொடர்ந்து திருவாட்டி சை அதிபர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் கோரி வருகின்றனர்.
"கடமையில் கண்ணாய் இருந்தேன். ஒருவேளை மக்களிடம் நான் அதிகமாக பேச தவறியிருப்பேன்," என்று அவர் சொன்னார். ஆயினும், வரும் தேர்தலில் வெற்றி தமக்கே என்று திருவாட்டி சை நம்பிக்கை தெரிவித்தார்