பங்ளாதேஷிலிருந்து துபாய்க்குச் செல்லவிருந்த விமானம் ஒன்றைக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்பட்ட ஆடவர் ஒருவரை அந்நாட்டின் மின்னல் படையினர் சுட்டுக் கொன்றனர். விமானம் பங்ளாதேஷின் சிட்டகோங் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, அந்தச் சந்தேக நபர் சுடப்பட்டதாகக் கூறப்பட்டது.
'பிஜி147' சேவை எண்ணைக் கொண்ட அந்த விமானத்தில் அப்போது இருந்த 134 பயணிகளும் 14 பணியாளர்களும் எந்த ஆபத்துமின்றி தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தைக் கடத்த முயன்ற 20 வயது மதிக்கத்தக்க ஆடவரின் பெயர் மகதி என்று பங்ளாதேஷ் ராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் மோட்டியூர் ரஹ்மான் தெரிவித்தார். துப்பாக்கியால் சுடப்பட்ட சந்தேக நபர் கைதான சில மணி நேரத்தில் உயிரிழந்ததாக அவர் கூறினார்.
"அவரை உடனே சரண் அடையுமாறு எங்களது படையினர் கோரினர். ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்து, வன்முறையாக நடந்துகொண்டார். எனவே அவரைச் சுட வேண்டியிருந்தது. அவரிடம் கைத்துப்பாக்கி ஒன்றைத் தவிர வேறு எதையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை," என்று மேஜர் ஜெனரல் ரஹ்மான் கூறினார்.
சிறப்புப் படையினர் விமானத்தை முற்றுகையிடத் தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் தாம் சந்தேக நபருடன் தொலைபேசி வழியாக உரையாடிக்கொண்டிருந்ததாக அந்நாட்டின் ஆகாயப் படையைச் சேர்ந்த மொஃபிட் என்ற உயர் அதிகாரி தெரிவித்தார். "எங்கள் பிரதமர் ஷெய்க் ஹசினாவிடம் பேசியாகவேண்டும் என்று அந்த ஆடவர் அடம்பிடித்தார். தன்னிடம் துப்பாக்கி ஒன்று இருப்பதாகவும் அப்போது அவர் மிரட்டினார்," என்றும் மொஃபிட் கூறினார்.
சந்தேக நபர், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகக் கூறியதாக பங்ளாதேஷின் சிவில் விமானத்துறை அதிகாரி நயீம் ஹசான் தெரிவித்தார். அந்த ஆடவரிடம் பேசுகையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகத் தெரிவதாகத் திரு ஹசான் கூறினார்.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பங்ளாதேஷ், உள்நாட்டுப் பயங்கரவாதச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த திணறுகிறது. 2016ஆம் ஆண்டில் கிளர்ச்சியாளர்கள் டாக்காவிலுள்ள பிரபலமான தேநீர் கடையில் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் 22 பேர் மாண்டனர்.