இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, வரும் பொதுத்தேர்தலில் மீண்டும் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் 30 பில்லியன் டாலர் அரசாங்கப் பணத்தைக் கிராமங்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னைய ராணுவத் தலைவர் பிரபோவோ சுப்பியாண்டோவைத் தேர்தல் களத்தில் சந்திக்கும் திரு விடோடோ, இந்தத் தகவலை ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைக்காட்சி உரை ஒன்றில் தெரிவித்தார்.
திரு விடோடோவின் நிர்வாகம் கிராமங்களுக்கு 257 ட்ரில்லியன் ரூப்பியா பணத்தை (24.79 பில்லியன் வெள்ளி) பணமாற்றம் செய்திருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு திரு விடோடோ பதவியில் நீடித்தால் இந்தத் தொகை 400 ட்ரில்லியன் ரூப்பியாவுக்கு உயரக்கூடும்.
"இந்தோனீசியாவில் பாதி பேர் கிராமங்களில் வாழ்கின்றனர். நகரங்களைவிட கிராமங்களில் வறுமை அதிகமாக இருக்கிறது," என்று திரு விடோடோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடம் ஜகார்த்தாவில் நடந்த பேரணி ஒன்றில் தெரிவித்தார். "நாங்கள் மக்களுக்கு மேலும் நியாயமான முறையில் வளங்களை விநியோகம் செய்வோம்," என அவர் கூறினார்.
2015ஆம் ஆண்டில் திரு விடோடோவின் 'கிராம நிதித்திட்டம்' தொடங்கியது முதல் இந்தோனீசியாவின் ஊழல் தடுப்புப் பிரிவு, இதுவரை ஊழல் குற்றச்சாட்டின்பேரில் நூற்றுக்கணக்கான அதிகாரிகளைக் கைது செய்துள்ளது. ஆனால் திரு விடோடோவின் முயற்சிகள் வாக்குகளைப் பெறுவதற்காகச் செய்யப்பட்டவை என்று அவரது அரசியல் எதிராளி பிரபோவோ குற்றம் சாட்டுகிறார். திரு விடோடோ நிதியைச் சரியாக நிர்வகிக்கவில்லை என்றும் திரு பிரபோவோ கூறுகிறார்.