புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் சுமார் 45 விழுக்காட்டினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.
ஆண்டுதோறும் பதிவாகும் 400,000 புதிய பிள்ளைப் பருவ புற்றுநோய் பாதிப்புகளில் கிட்டத்தட்ட பாதி மட்டும்தான் தேசிய சுகாதாரப் பதிவகங்களில் குறிப்பிடப்படுவதாக 'லேன்சட் ஆன்காலஜி' என்ற மருத்துவ சஞ்சிகை குறிப்பிடுகிறது. பாதிக்கப்பட்ட எஞ்சியோருக்கு எந்தவித உதவியும் அளிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அந்தப் பிள்ளைகள் இறக்கும்போதும் அவர்கள் புற்றுநோயாளிகள் என்ற விவரம் அவர்களது மரணச் சான்றிதழ்களில் எழுதப்படாது என்று ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான ஈவா ஃபௌச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் புற்றுநோய் ஆய்வமைப்பின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, 200 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
ஆப்பிரிக்கா, தென்மத்திய ஆசியா, பசிஃபிக் தீவுகள் ஆகிய வட்டாரங்களில் புற்றுநோய் உள்ள பிள்ளைகளில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு அந்நோய் உறுதி செய்யப்படவில்லை என்றும் சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.