அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பூசல் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் அணுவாயுதங்களை வைத்திருக்கும் அந்த இரண்டு நாடுகளும் ஒன்றோடு ஒன்று மோதியதை அடுத்து திரு டிரம்ப், வியட்னாமில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீரில் பிப்ரவரி 14ஆம் தேதியில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 40 துணை இராணுவப் படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் அமைதிக்காகக் குரல்கொடுத்து வருகின்றன.
இதற்கிடையே பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைத் தொடர்புகொண்டார்.
இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல் குறித்து மிகவும் அக்கறை அடைவதாக திரு வாங் தெரிவித்தார். இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் இருந்து இந்த நிலைமை மேலும் மோசமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீர் பகுதிக்குள் இந்தியாவின் இரண்டு போர்விமானங்கள் நுழைந்தபோது அவற்றில் ஒன்றைப் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது.
செவ்வாய்க்கிழமை இந்திய போர்விமானங்கள் பாகிஸ்தானிய வான்வெளிக்கு சென்று பயங்கரவாதிகள் முகாம்களில் குண்டு போட்டதாக இந்தியா தெரிவித்தது. ஆனால் யாரும் கொல்லப்படவில்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பிடிபட்ட போர்விமானி அபிநந்தன் நாளை ( மார்ச் 1 ) விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.

