மலேசியாவில் எம்ஆர்டி நிலைய மின்தூக்கி ஒன்றில் வங்கி மேலாளராகப் பணிபுரியும் பெண் ஒருவரைக் கொடூரமாகத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட ஆடவர் மீது அமர்வு நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
லீ மீய் ஷான், 40, என்ற அந்தப் பெண்ணை வேண்டும் என்றே தாக்கியதாகவும் அவரது அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், இரண்டு ஏடிஎம் அட்டைகள், இரு கடன் அட்டைகள், 400 மலேசிய ரிங்கிட் ஆகியவற்றைப் பறித்துச் சென்றதாகவும் அந்த ஆடவர் மீது குற்றம் சுமத்தப் பட்டது.
ஆயினும், குளிரூட்டி பழுது பார்ப்பாளரான ஜி.தீனதயாளன், 25, எனும் அந்த ஆடவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத் தார்.
இவ்வாண்டு அன்பர் தினத் தன்று காலை 6.45 மணியளவில் செராஸில் உள்ள தாமான் முத்தி யரா எம்ஆர்டி நிலைய மின்தூக்கி யில் இந்த வழிப்பறி, தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
தண்டனைச் சட்டப் பிரிவு 394ன்கீழ் தீனதயாளன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றம் புரிந்தது நீதி மன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டால் இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
குற்றம் 'கொடூரமானது' என்ப தால் இவருக்குப் பிணை வழங்கக் கூடாது என அரசாங்க வழக்கறி ஞர் என்.ஜாய் ஜோதி கேட்டுக் கொண்டார்.
"ரயில் நிலையத்தில் பொருத் தப்பட்டுள்ள கண்காணிப்புப்படக் கருவியில் இந்தக் கொடூரச் சம்பவம் பதிவாகியுள்ளது. அது தொடர்பான காணொளியும் இணையத்தில் வேகமாகப் பரவியது," என்று திருவாட்டி ஜாய் ஜோதி கூறினார்.
அவரது கோரிக்கையை ஏற்று தீனதயாளனுக்குப் பிணை வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். இம்மாதம் 15ஆம் தேதி வழக்கு குறித்த விசாரணை நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.
தீனதயாளனைப் பிரதிநிதித்து வழக்கறிஞர் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
மின்தூக்கியினுள் பெண் ஒரு வரை ஆடவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கி, வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவ, சம்பந்தப்பட்ட ஆடவரைக் கண்டுபிடித்து அவருக்குக் கடும் தண்டனை விதிக்க வேண்டும் என இணையவாசிகள் பலரும் கொந்தளித்திருந்தனர்.