பத்து மலை கோயில் நிர்வாகக் குழுவின் சொத்து மேம்பாடு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கோயில் அதிகாரிகள் மூவரைத் தடுப்புக்காவலில் வைத்தது. இவர்களில் 'டான் ஸ்ரீ' பட்டத்தைக் கொண்டுள்ள ஒருவர் அடங்குவதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஊழல் எதிர்ப்பு ஆணைய அதிகாரிகள் அவரை விசாரித்து வருவதாக எம்ஏசிசி தெரிவித்தது. "சொத்து உடன்பாடு தொடர்பான ஆவணங்களைத் தேட ஆணைய அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தனர்," என்று கூறப்படுகிறது. ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான அலுவலகத்திலும் அதிகாரிகள் ஏககாலத்தில் சோதனை நடத்தினர். ரொக்கப் பணத்தை அதிகாரிகள் எண்ணுவதையும் அவர்கள் ஆபரணங்களைச் சோதனை செய்வதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகின்றன.
ஜாலான் கூச்சிங்கிலுள்ள அந்த 4.5 ஏக்கர் நிலத்தின் தொடர்பில் இந்தச் சோதனைகள் செய்யப்பட்டிருந்தன. குடியிருப்புகள், அலுவலகங்கள், கடைகள் ஆகியவற்றுக்காக இந்த நிலம் பயன்படுத்தப்படவிருந்தது. ஆயினும் கோயில் நிர்வாகத் தலைவர் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.