கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கான முக்கிய ஏவுதளத்தின் கட்டடப் பணிகளை வடகொரியா மீண்டும் தொடங்கியுள்ளது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதன்முதலாகச் சந்தித்ததை அடுத்து, வடகொரியா 'சோஹே' என்ற அந்தத் தளத்தைக் கட்டங்கட்டமாக மூடத் தொடங்கியது.
ஆனால் இப்போது அதனை மறுபடியும் கட்டுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக தென்கொரிய தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. இந்தத் தளத்திலுள்ள சில கட்டடங்கள் பிப்ரவரி 16ஆம் தேதிக்கும் மார்ச் 2ஆம் தேதிக்கும் இடையே கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் என்று வடகொரியாவைச் செயற்கைக்கோள்கள் வழியாகக் கண்காணிக்கும் '38-நார்த்' என்ற அமெரிக்க அமைப்பு தெரிவித்தது.
2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த சிங்கப்பூர் உச்சநிலை சந்திப்புக்குப் பிறகு 'சோஹே' அணுவாயுதத் தளத்தை மூடுவதற்கான பணிகள் தொடங்கின. ஆனால் ஆகஸ்ட் மாத முற்பகுதிக்குள் அந்தப் பணிகளை வடகொரியா நிறுத்தி வைத்திருப்பதாக அப்போது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
ஹனோயில் கடந்த வாரம் தோல்வியில் முடிந்த உச்சநிலை சந்திப்பால் இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்காலப் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியம் குறைவு என்று கருதப்படுகிறது. வடகொரியாவுக்குத் தூதுக் குழு ஒன்றை அனுப்ப அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ மார்ச் 5ஆம் தேதி விருப்பம் தெரிவித்திருந்தாலும் இது குறித்து தனக்கு எந்தக் கடப்பாடும் இல்லை என்றும் கூறினார்.