ஆசிய பசிஃபிக் வட்டாரத்தில் பெண்களுக்கு இரண்டாவது ஆக ஆபத்தான நாடு இந்தோனீசியா என சிங்கப்பூரில் தளம் கொண்டிருக்கும் 'வேலியூசெம்ப்' ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆய்வறிக்கையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள 14 நாடுகளில் இந்தியா, இந்தோனீசியா, பிலிஃபீன்ஸ் ஆகிய நாடுகளில் பெண்கள் ஆக அதிகமான அபாயத்தை எதிர்நோக்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார வசதிகளைப் பெறுவதில் சிரமம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்களின் கடுமையின்மை, ஆண்-பெண் சமத்துவமின்மை ஆகியவற்றால் இந்த மூன்று நாடுகள் இவ்வாறு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
பெண்களுக்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆகக் கீழே உள்ளது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தோனீசியா 13ஆம் இடத்திலும் பிலிப்பீன்ஸ் 12ஆம் இடத்திலும் உள்ளன. அந்தப் பட்டியலில் சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான் ஆகியவை சிறந்த ஐந்து நிலைகளில் உள்ளன.
"சமுதாயத்தில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்க மனப்போக்குகளால் இந்நாடுகளில் இருக்கும் பெண்கள், மற்ற நாடுகளில் இருக்கும் பெண்களைக் காட்டிலும் தங்களது பாதுகாப்பு குறித்து பயப்படுகின்றனர்," என்று 'வேலியூசெம்ப்' தெரிவித்தது.
பாலியல் வன்முறை தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க இந்தோனீசியாலுள்ள ஆர்வலர்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இதனை சமய பழமைவாதிகள் எதிர்க்கின்றனர். 2016ஆம் ஆண்டில் பெங்குலு நகரில் 14 வயது சிறுமி குண்டர் கும்பல் ஒன்றால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டாள். இதனை அடுத்து இந்த மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிமுகம் கண்டது.