போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களைத் தற்காலிகமாகச் சேவையிலிருந்து நீக்கும்படி சீனாவின் உள்நாட்டு விமான நிறுவனங்களிடம் சீன அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
நேற்று நைரோபியை நோக்கிச் சென்ற எத்தியோப்பிய விமானம் வானில் பறந்து சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி விமானத்தில் இருந்த 157 பேரும் மாண்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க நிறுவனமான போயிங்கின் மிகப் பிரபல விமான ரகமான 737 மேக்ஸ், கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி இந்தோனீசியாவை ஒட்டிய ஜாவா கடலில் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளாகி 189 பேர் மாண்டனர்.
இந்நிலையில் இந்தோனீசியாவின் விமானத்துறை நிபுணர் அனைத்து போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களையும் செயல்பாட்டிலிருந்து நீக்கும்படி இந்தோனீசிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.