பல தலைமுறையாக வடகொரியாவை ஆட்சி செய்துவரும் கிம் ஜோங் உன்னின் மூதாதையர்களே அந்நாட்டு மக்களுக்கும் அந்நாட்டின் தேவைகளுக்கும் வேண்டிய அனைத்து முடிவுகளையும் எடுத்துவந்துள்ளனர். அந்த வழக்கத்தில் மாற்றம் இல்லை.
சுப்ரீம் மக்கள் சபை எனும் வடகொரிய நாடாளுமன்றத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னால் வகுக்கப்படும் சட்டங்களுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் ஒப்புதல் வழங்கும் பணியை மட்டுமே தலையாயப் பணியாக அந்த சபை செய்துவருகிறது. இதற்கு முன்னர் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜோங் உன் பியாங்காங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி நேற்று அங்கு தேர்தல் நடைபெற்றது. பியாங்காங் நகர வாக்களிப்பு மையத்தில் கிம் ஜோங் உன் நேற்று வாக்களித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள வாக்களிப்பு மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.