மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரப்பர் தோட்டத் தொழிலாளரின் மகள் திவ்யா ஜனனி சென்ற ஆண்டின் மலேசிய தேசிய தேர்வில் சிறந்த மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வெளி உலகத்தோடு அதிகம் தொடர்பில்லாத மாபெரும் தோட்டத்தில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஜி மாரியப்பன் - எம் சாந்தியின் இளைய மகள் திவ்யா.
தினமும் 50 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து தானா மேரா பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார்.
கடின உழைப்பைக் கொண்டு அனைத்துப் பாடங்களிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ள அவர் மலாயா பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறையில் பட்டம் பெற சிறு வயது முதல் ஆர்வம் கொண்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் அதிபர் மறைந்த அப்துல் கலாம் தான் அவரது வாழ்க்கை வழிகாட்டி என்று கூறும் திவ்யா, அவரின் கருத்துகளை முன்மாதிரியாகக் கொண்டே இந்தத் தேர்ச்சி சாதனையைப் பெற்றிருப்பதாகக் கூறுகிறார்.