போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் பயன்பாட்டை ஐரோப்பா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிறுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் புதன்கிழமை இந்த விமானங்களின் பயன்பாட்டை முடக்கியது. எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் சில நாட்களுக்குமுன் விழுந்து நொறுங்கி 157 பேர் கொல்லப்பட்டதால், 737 மேக்ஸ் விமானங்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை எழுந்திருப்பது இதற்குக் காரணம். ஐந்து மாதங்களில் இந்த ரக விமானம் சம்பந்தப்பட்டிருந்த இரண்டாவது விபத்து இது.
உலகின் ஆகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், தற்போது ஆக மோசமான நெருக்கடியை எதிர்நோக்குகிறது. பல ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் 737 ரக விமானங்களே நிறுவனத்திற்கு ஆக நம்பகமான லாப மூலமாக இருந்து வந்துள்ளது. இப்போது 737 மேக்ஸ் ரக விமான விபத்துகளால், போயிங் நிறுவனத்தின் நன்மதிப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விமானங்களின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், போயிங் நிறுவனம் பிரச்சினைகளைச் சரிசெய்யவும், மற்றுமோர் உத்தேச பேரிடரைத் தவிர்க்கவும் அவகாசம் கிடைத்திருப்பதாக நியூயார்க்கின் இன்வர்னஸ் கவுன்சில் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு ஆய்வாளர் டிம் கிரிஸ்கி கூறினார்.
அமெரிக்காவில் 737 மேக்ஸ் ரக விமானங்களைப் பயன்படுத்திவந்த சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் குழுமம், யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியன பயணிகள் வேறு விமானங்களில் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்து வருகின்றன.