நியூசிலாந்தில் கிறைஸ்ட்சர்ச் நகரில் இருக்கும் இரண்டு பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டு இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 50 பேரில் ஐந்து பேர் இந்தியர்கள் என்பது உறுதிப்படுத்தப் பட்டு உள்ளது. அந்தப் பயங்கர சம்பவத்தில், மெஹ்பூப் கோக்கார், ராமிஸ் வோரா, ஆசிஃப் வோரா, அன்சி அலிபாவா, ஓசிர் காதர் ஆகிய ஐந்து இந்தியர்கள் மாண்டதாக அடையாளம் காணப்பட்டு இருக்கிறது என நியூசிலாந்திலுள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் கூறியது.
ஆஸ்திரேலியாவில் பிறந்த பிரன்டன் ஹாரிசன் டரன்ட், 28, என்ற நபர், பள்ளிவாசல்களில் இருந்தோரை நோக்கி கண்டபடி துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கியால் பலரையும் சுட்டுத் தள்ளிய அந்த ஆஸ்திரேலிய நபர், தனி ஒருவராக செயல்பட்டு இந்தக் காரியத்தைச் செய்து இருக்கிறார் என்று நியூசிலாந்து போலிசார் தெரிவித்து இருக்கிறார்கள். பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் தொடர்பில் இதர மூன்று பேர் கைதுசெய்யப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் அந்தச் சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என்பது பின்னர் தெரியவந்ததாக நியூசிலாந்து போலிஸ் ஆணையர் மைக் புஷ் தெரிவித்தார்.