கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சிங்கப்பூரும் சீனாவும் மலேசியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளாக என்றைக்கும் இருப்பர் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவும் இந்நேரத்தில் டாக்டர் மகாதீர், கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் 'இன்வெஸ்ட் மலேசியா 2019' மாநாட்டில் இவ்வாறு கூறினார். "இவ்விரண்டு நாடுகளையும் நாங்கள் நெருங்கிய பங்காளிகளாகப் பார்க்கிறோம் என்பதை உங்களிடம் தெரிவிக்கிறேன்," என்று மாநாட்டில் கூடியிருந்த முதலீட்டாளர்களிடம் டாக்டர் மகாதீர் சொன்னார்.
தண்ணீர் விநியோக ஒப்பந்தம் தொடர்பான வேறுபாடுகளைக் களைய சிங்கப்பூரும் மலேசியாவும் முயற்சி எடுத்து வருகின்றன. கடல், வான் எல்லைகள் குறித்தும் இவ்விரு நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. மேலும், இசிஆர்எல் ரயில் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை ரத்து செய்ய மலேசிய ஆரம்பத்தில் எடுத்த முடிவு, சீனாவைக் கவலை அடையச் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும் டாக்டர் மகாதீர் பிறகு மனம் மாறி, ரயில் திட்டத்திற்கான செலவு குறைக்கப்பட்டால் அத்திட்டத்தைத் தொடரலாம் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, அரசாங்கத்தின் கடன்களைக் குறைக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான சில நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார். ஆயினும், இதற்கான கால வரையறையை அவர் வெளியிடவில்லை. மலேசியாவின் தற்போதைய 1 ட்ரில்லியன் ரிங்கிட்டுக்கு மேலான கடன் சுமைக்கு அந்நாட்டின் முன்னையப் பிரதமர் நஜிப் ரசாக் காரணம் என்று டாக்டர் மகாதீர் சாடினார்.