ரஷ்யாவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் கூட்டுச் சதியில் இணைந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்படவில்லை. வழக்கை விசாரித்த சிறப்பு வழக்கறிஞர் ராபர்ட் முல்லரின் அறிக்கை இவ்வாறு குறிப்பிடுவதாக அமெரிக்காவின் தலைமைச் சட்ட அதிகாரி வில்லியம் பார் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, தன் மீதான பழியை முழுமையாக நீக்குவதாகத் திரு டிரம்ப் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டில் தனது அதிபர் தேர்தல் பிரசாரத்திற்காக திரு டிரம்ப், ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படவில்லை என்று முல்லரின் அறிக்கை குறிப்பிடுகிறது.
திரு டிரம்ப்பின் நம்பகத்தன்மையை இதுவரையில் பெரும் கேள்விக்குறியாக்கிய இந்த விவகாரம் தீர்ந்ததை அடுத்து அவர் இப்போது அடுத்தாண்டு தேர்தலில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம். இந்த விசாரணையின் முடிவு அவருக்கு ஓர் அரசியல் வெற்றி என்றனர் கவனிப்பாளர்கள்.
2017ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் தலைவர் ஜேம்ஸ் கோமியை திரு டிரம்ப் பதவிநீக்கம் செய்தபோது அவர் தன்மீதான ரஷ்ய விசாரணையை இடைமறிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2016ஆம் ஆண்டு தேர்தலின் பல்வேறு சோதனைகளில் திரு டிரம்ப் தலையிட்டபோது அவர் சட்டத்தை மீறினாரா என்பது குறித்து முல்லர் எந்த முடிவையும் தனது அறிக்கையில் நேரடியாகக் கூறவில்லை. இருந்தபோதும், "அதிபர் குற்றம் செய்திருக்கிறார் என்பதை இந்த அறிக்கை முடிவாகக் கூறவில்லை. ஆயினும் அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் இந்த அறிக்கை விடுவிக்கவில்லை," என்று அவர் அறிக்கையில் கூறினார்.
இடைமறித்தல் குற்றச்சாட்டில் இருந்து திரு டிரம்ப் விடுவிக்கப்படாதது, முழு அறிக்கையைப் பொதுப்படையாக வெளியிடுவதன் அவசரத்தைக் காட்டுவதாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற பேச்சாளரும் செனட் ஜனநாயகக் கட்சித் தலைவர சக் ஷூமரும் தெரிவித்தனர்.
"நம் நாடு இதனை அனுபவிக்க வேண்டியிருந்தது ஓர் அவமானம்," என்று திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தன்னை அழிக்க மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி தோல்வி அடைந்ததாகத் தெரிவித்த திரு டிரம்ப், இதனை மேற்கொண்டவர்களை எவரேனும் கண்காணித்தால் நன்றாக இருக்கும் என்று பூடகமாகக் கூறினார்.