பேங்காக் நகரின் பாங் கோ லேம் மாவட்டத்திலுள்ள கூட்டுரிமை வீட்டுக் கட்டடம் ஒன்றின் பல மாடி கார் நிறுத்துமிடத்தின் எட்டாவது மாடியிலிருந்து கார் ஒன்று கீழே விழுந்ததைத் தொடர்ந்து பெண் ஒருவர் காயமடைந்ததாக தாய்லாந்து போலிசார் தெரிவித்தனர். சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இது பற்றிய தகவலை திங்கட்கிழமை 11 மணிக்குப் பெற்றதாக போலிசார் தெரிவித்தனர். மூன்றாம் ராமா சாலையிலுள்ள 'பிராராம் 3 ரெசிடன்ஸ்' கூட்டுரிமை வீட்டுக் கட்டடத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்தது. அந்தப் பெண் ஓட்டுநர் 40 வயது ரங்திப் தொங்சான்ரீட் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
தலைகீழாகக் கவிழ்ந்தவாறு காணப்பட்ட காருக்குள் ரங்திப் சுயநினைவின்றி இருந்ததை போலிசாரும் மீட்புப் பணியாளர்களும் கண்டனர். அப்போது காருக்குள் இருந்த பயணிகள் பாதுகாப்புக்கான காற்றடைத்த பைகள் இயக்கப்பட்டிருந்தன.
ரங்திப் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குச் சுயநினைவு திரும்பியதாகவும் அவர் குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர். 50 சென்டிமீட்டர் உயரமான சுவரை அவரது கார் மோதியதில் அந்த சுவர் இடிந்து உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
வாகனத்தை நிறுத்துவதற்காக அந்தப் பெண் தனது காரை பின்னோக்கிச் செலுத்திக்கொண்டிருந்தபோது தவறுதலாக சுவரை அது மோதியதாக நம்பப்படுகிறது.

