கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதின் நிர்வாகத்தைத் தமது மகள் நூருல் இஸா சாடியிருப்பதை பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தற்காத்துப் பேசியுள்ளார். டாக்டர் மகாதீரை மட்டும் குறிவைத்து நூருல் இஸா கருத்து ரைக்கவில்லை என்றும் பக்கத் தான் ஹரப்பான் ஆளும் கூட்ட ணியின் மற்ற தலைவர்களைப் பற்றியும் அவர் பேசியதாக திரு அன்வார் நேற்று கூறினார். தமது அரசாங்கம் மீது அதிருப்தி கொண்டிருப்பதாக பிகேஆர் கட்சி எம்.பி. நூருல் இஸா கூறியதை அறிந்து தாமும் வருத்தமடைவதாக டாக்டர் மகாதீர் முன்னதாக தெரிவித்து இருந்தார். அண்மையில் சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்தபோது, "முன்னாள் சர்வாதிகாரியான டாக்டர் மகாதீர் உடன்" பணியாற்ற வேண்டிய நிலையில் இருப்பதால் தாம் மனமுடைந்திருப்பதாக நூருல் இஸா கூறியதை அடுத்து டாக்டர் மகாதீரின் கருத்து வெளி வந்தது. அவர் அளித்த பேட்டியில் டாக்டர் மகாதீரின் "சர்வாதிகாரப் போக்கு" குறித்து சில கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினராக இதுவே தமது கடைசி தவணை என்றும் நூருல் இஸா கூறியிருந்தார். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி கட்சிகளுக்கிடையே இது சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பலரும் நூருல் இஸாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் மகாதீர், "அவர்கள் என்மீது வருத்தம் அடைந்திருக்கிறார்கள். எனக்கும் அவர்கள் மீது வருத்தம் தான்," என்று பொதுவாகக் கூறினார். எனினும் இது குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை.
மகளின் கருத்தைத் தற்காத்து பேசிய அன்வார் இப்ராஹிம்
2 mins read

