சாலையில் சென்றுகொண்டிருந்த சிவப்பு ஃபெராரி கார் ஒன்று திடீரென நடைமேடை மீது ஏறி கேளிக்கை கூடத்திற்குள் புகுந்த சம்பவத்தில் ஒரு பெண் காயமடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் டமன்சாரா ஹைட்ஸ் வட்டாரத்திலுள்ள பிளாஸா பட்டாய் கடைத்தொகுதியில் வியாழக்கிழமை (மார்ச் 28) காலை 8.45 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது.
முகத்திலிருந்தும் இடது கரத்திலிருந்தும் ரத்தம் வழிந்துகொண்டிருந்த நிலையில் அந்தப் பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஓட்டுநர் தவறுதலாக விசைமுடுக்கியை (accelerator) காலால் அழுத்தியதால் இவ்வாறு நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட ஃபெராரி காரின் ஓட்டுநர் அந்தக் கேளிக்கை கூடத்திற்கு அடிக்கடி செல்லும் வாடிக்கையாளர் என்று கூடத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்த பெண் இறந்ததாக போலிச்செய்தி இணையத்தில் பரவியது.

