சிட்னி விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்திலிருந்து புகை வெளிவந்ததை அடுத்து அங்கிருந்த ஊழியர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர். சற்று நேரத்திற்குப் பிறகு விமான நிலையத்தின் செயல்பாடு வழக்க நிலைக்குத் திரும்பியது.
ஆஸ்திரேலிய நேரப்படி வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிவாக்கில் இந்தச் சம்பவம் நேர்ந்ததாக அந்நாட்டின் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் கணினி ஒன்று அளவுக்கு அதிகமாகச் சூடுபிடித்ததால் இவ்வாறு நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் விமான நிலைய ஓடுபாதைகளில் விமானங்கள் சில தரையிறங்கியபோதும் பயணிகளின் வெளியேற்றம் தாமதம் அடைந்ததாகச் சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானச் சேவைகள் இப்போது சீராக இயங்கி வருவதாக ஆஸ்திரேலியாவின் தேசிய விமானக் கட்டுப்பாடுச் சேவை அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

