போர், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் ஐம்பத்து மூன்று நாடுகளைச் சேர்ந்த 113 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடும் பசியால் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்தகையோர் ஆக அதிக எண்ணிக்கையில் ஆப்பிரிக்க கண்டத்தில் இருப்பதாக ஐ.நா செவ்வாய்க்கிழமை ( ஏப்ரல் 2) கூறியது.
பட்டினிக்கு உள்ளாகும் அபாயத்தை எதிர்நோக்கும் மக்களில் மூன்றில் இரண்டு பேர் ஏமன், காங்கோ ஜனநாயகக் குடியரசு, ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஐ.நாவின் உணவு, வேளாண்மை நிறுவனம் இவ்வாண்டுக்கான தனது உலகளாவிய உணவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு, உணவுப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நாடுகளைப் பட்டியலிடுகிறது.
ஆப்பிரிக்காவில் 72 மில்லியன் பேரில் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக உணவு, வேளாண்மை நிறுவனத்தின் அவசரநிலைப் பிரிவின் தலைவர் டோமினிக் பொர்ஜியன் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பட்டினிக்கு போரும் பாதுகாப்பின்மையும் ஆக முக்கிய காரணங்களாக இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. வறட்சி, வெள்ளம் இவற்றுக்கு அடுத்த நிலைகளில் வருவதாகக் கூறப்படுகிறது.