கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசலில் ஐம்பது பேரைச் சுட்டுக்கொன்றதாகக் குற்றம் சாட்டப்படும் துப்பாக்கிக்காரனுக்கு மனநலப் பரிசோதனை செய்யப்படவேண்டும் என்று நியூசிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 15ஆம் தேதி நிகழ்ந்த அந்தத் தாக்குதலில் உயிர் தப்பியவர்களும் தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களும் கிறைஸ்ட்சர்ச் நீதிமன்றம் ஒன்றில் குழுமினர். துப்பாக்கிக்காரனான 28 வயது பிரென்டன் டரன்ட் அங்கு நேரடியாக முன்னிலையாகவில்லை. பலத்த பாதுகாப்பு கொண்ட சிறை ஒன்றிலிருந்த அவருடன் நீதிமன்றத்தினர் நேரலை காணொளி இணைப்பு வழியாக உரையாடினர்.
பிரென்டன் மீது 50 கொலைக் குற்றச்சாட்டுகளும் 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. அமைதியும் பசுமையுமாக இருக்கும் நியூசிலாந்தின் மக்களை இந்தத் துப்பாக்கிச்சூடு உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு படுகொலை என்று நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் கண்டித்திருந்தார். துப்பாக்கிச் சட்டங்களைக் கடுமையாக்கும் பணிகளை உடனே அவர் மேற்கொண்டார்.
உயிர்ப் பிழைத்தோரில் 24 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆக அண்மை விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் நான்கு வயது சிறுமி உட்பட நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.