'விக்கிலீக்ஸ்' இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை லண்டனிலுள்ள தனது தூதரகத்திலிருந்து வெளியேற்ற எக்குவடோர் திட்டமிடுவதாக 'விக்கிலீக்ஸ்' தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அசாஞ்சின் கைதுக்காக எக்குவடோரும் பிரிட்டனும் இணைந்து செயல்படுவதாக அந்த இணையத்தளம் கூறுகிறது.
இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில நாட்களில் ஜூலியன் அசாஞ்ச், எக்குவடோர் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார் என்று விக்கிலீக்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது.
இது குறித்து எக்குவடோரின் அரசாங்கம் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
எக்குவடோரின் அதிபர் லெனின் மொரேனோ முன்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உடற்குறையுள்ளோருக்கான சிறப்புத் தூதராகப் பணியாற்றியபோது, ஊழல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக விக்கிலீக்ஸ் தனது தளத்தில் குறிப்பிட்டுள்ளது. இதனால் அசாஞ்சை வெளியேற்ற எக்குவடோரின் அரசாங்கம் முடிவெடுத்ததாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூறியதாக விக்கிலீக்ஸ் கூறியது.
பிப்ரவரி 27ஆம் தேதி அதிபர் மொரேனோ நேரலை தொலைக்காட்சி உரை ஒன்றில் தம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன் திரு அசாஞ்சின் செயல்கள் வியப்பூட்டுபவை என்று எக்குவடோரின் வெளியுறவு அமைச்சர் ஜோசே வெலன்சியா கூறினார்.

