அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் எஃப்-16 போர்விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறியதில் உண்மை இல்லாததுபோல் தோன்றுவதாக 'ஃபாரின் பாலசி' என்ற சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது. அடையாளம் வெளியிடப்படாத இரண்டு அமெரிக்கத் தற்காப்பு அதிகாரிகளை சஞ்சிகையின் கட்டுரை மேற்கோள் காட்டியது.
பாகிஸ்தானின் எஃப்-16 போர்விமானங்கள் எதுவும் காணாமல் போகவில்லை என்று அமெரிக்கா நடத்திய கணக்கெடுப்பு வழி தெரிய வந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்ததாக 'ஃபாரின் பாலசி' தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானின் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறியிருந்ததை இந்தப் புதிய தகவல் மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலப்பகுதியின் மீது இந்தியா ஆகாயத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றநிலை அதிகரித்தது. இதில் இந்திய விமானம் ஒன்றை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய பிறகு அதன் விமானி பிடிபட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இது குறித்த கேள்விகளுக்கான பதிலை இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் உடனடியாக வெளியிடவில்லை. பாகிஸ்தானின் எஃ-16 வீழ்த்தப்பட்டதற்கான நேரடி சாட்சிகளும் மின்னியல் ஆதாரங்களும் இந்தியாவிடம் இருப்பதாக திரு குமார் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.