ராணுவ ரீதியில் அமெரிக்கா மட்டுமே பிலிப்பீன்ஸின் நட்பு நாடாக இருக்கும் என்று பிலிப்பீன்ஸின் வெளியுறவு அமைச்சர் டியோடொரோ லோச்சின் தெரிவித்திருக்கிறார். தென் சீனக் கடற்பகுதியில் சர்ச்சைக்குரிய தீவுக்கு அருகே செல்லும் சீன ராணுவக் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து திரு லோச்சின் இவ்வாறு கூறியுள்ளார்.
"உலகத்தில் ஜனநாயகத்திற்கும் மனித உரிமைக்கும் ஒரே அரணாக அமெரிக்கா விளங்குகிறது. எங்களுக்கு ஒரே ஒரு ராணுவப் பங்காளியாகத் தொடர்ந்து இருக்கப்போவதும் அமெரிக்காதான். மற்ற நாடுகள் எங்களுக்குத் தேவையில்லை," என்று அவர் ஞாயிற்றுக்கிழமை டுவிட்டரில் தெரிவித்தார்.
பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே பதவியேற்றது முதல் அந்நாடு ஆரம்பத்தில் சீனாவின் பக்கம் சாய்ந்திருந்தது. ஆயினும் அமெரிக்காவுடன் உறவுகளை வலுப்படுத்த பிலிப்பீன்ஸ் அண்மையில் நாட்டம் கொண்டது.
பிலிப்பீன்ஸுக்குச் சொந்தமான கடற்பகுதிகளை சீனா கைப்பற்ற முற்படும்போது அமெரிக்கா தமது நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டுமா என்று அந்நாட்டின் அதிபர் டுட்டார்ட்டே கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போம்பியோ, பிலிப்பீன்ஸின் கப்பல்களையோ அல்லது விமானங்களையோ சீனா தாக்கினால் தற்காப்பு ஒப்பந்தம் ஒன்றின்படி அமெரிக்கா பிலிப்பீன்ஸுக்கு நிச்சயம் கைகொடுக்கும் என்று தெரிவித்தார்.
பிலிப்பீன்ஸுக்குச் சொந்தமான திட்டு (Thitu) தீவுகளில் அண்மை சில மாதங்களாக 200க்கும் அதிகமான சீனக் கடற்படைக் கப்பல்கள் காணப்பட்டிருந்தன. இது குறித்த தனது அதிருப்தியை அதிபர் டுட்டார்ட்டே வெளியிட்ட சில நாட்களில் திரு லோச்சினின் டுவிட்டர் பதிவு வெளிவந்துள்ளது.

