சவூதி அரேபிய செய்தியாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பில் 16 சவூதி அரேபியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளனர். திரு கஷோகியின் கொலை குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நடவடிக்கை எடுக்க அந்நாட்டின் நாடாளுமன்றம் குரல் கொடுக்கும் வேளையில் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ இதனை அறிவித்தார்.
சவூதியின் அரச குடும்பத்தைக் குறைகூறி வந்த திரு கஷோகி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் துருக்கியிலுள்ள தூதரகத்தில் கொல்லப்பட்டார். அவரது சடலம் இதுநாள்வரை மீட்கப்படவே இல்லை.
கொலைக்குப் பின்னணியில் தான் இருந்ததை முதலில் மறுத்த சவூதி அரேபிய அரசாங்கம், பின்னர் தனது ஆட்கள் திரு கஷோகியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டது. ஆயினும், அந்தக் கொலை நோக்கமில்லாமல் செய்யப்பட்டது என்று தெரிவித்தது.
இது குறித்த தமது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்க திரு டிரம்ப் மறுத்திருக்கிறார்.

