தென்கொரியாவில் கருக்கலைப்புக்கு எதிராக நெடுநாளாக நடப்பிலிருக்கும் சட்டத்தை அகற்றுவது பற்றி அந்நாட்டின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல் 11ஆம் தேதி) முடிவெடுக்கும். பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சில சூழ்நிலைகளில் தவிர, சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்யும் பெண்கள் இந்தச் சட்டத்தின்படி ஓராண்டு சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்நோக்கலாம். இத்தகைய கருக்கலைப்புகளைச் செய்யும் மருத்துவர்களுக்கு ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்தச் சட்டம் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாகப் பெண்ணுரிமை ஆர்வலர்கள் குறைகூறி வருகின்றனர். கருக்கலைப்பு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் பெண்கள் சட்டவிரோதமான முறைகளைக் கையாளும்போது சுகாதார அபாயத்திற்கும் சமூக அவப்பெயருக்கும் ஆளாவதாக அந்த ஆர்வலர்கள் சுட்டினர்.
இதன் தொடர்பான பேரணிகள் தென்கொரியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்தச் சட்டத்தை ரத்து செய்தால் நாட்டில் கருக்கலைப்பு தலைவிரித்து ஆடும் என்று 2012ஆம் ஆண்டில் தென்கொரிய அரசமைப்பு நீதிமன்றம் கூறியபோதும் பெண்ணுரிமை ஆர்வலர்கள் தொய்வின்றிப் போராடுகின்றனர்.