ஆசியத் திறனாளர்களுக்கான 'ஏஷியா காட் டேலன்ட் 2019' இறுதிப் போட்டியில் 'மனிதக் கணிப்பான்' என அழைக்கப் படும் மலேசியாவின் யாஷ்வின் சரவணன், 15 (படம்), இரண்டாமிடத்தைப் பிடித்தார். சிக்கலான கணக்குகளுக்கு நொடிகளில் விடை சொல்லி பார்வையாளர்களையும் நடுவர்களையும் வியப்பில் ஆழ்த்தி வந்தார் 'மனக் கணக்கு' புலியான யாஷ்வின். இறுதிப் போட்டிக்கு இவர் தேர்ந்தெடுத்த கருப்பொருள் 'நாட்காட்டிக் கணக்கு'. நடுவர்கள் மூவரும் ஆளுக்கு ஒரு தேதியைச் சொல்ல, அது என்ன கிழமை என்பதை யாஷ்வின் மிகச் சரியாகக் கணித்து பிரமிக்க வைத்தார். சிலாங்கூரின் எஸ்எம்கே பண்டார் துன் ஹுசைன் ஒன் 2 உயர்நிலைப் பள்ளி மாணவரான இவர், தமது ஏழு வயதிலேயே 'அபாக்கஸ்' எனும் மணிச்சட்டக் கணக்கு வகுப்பிலும் மனக்கணக்கு வகுப்பிலும் சேர்ந்துவிட்டார். 2017ல் நடந்த அனைத்துலக அபாக்கஸ், மனக்கணக்குப் போட்டியிலும் இவர்தான் வெற்றியாளர். "மொத்தம் 200 பேர் பங்கேற்ற இப்போட்டியில் இரண்டாவதாக வருவேன் என நினைக்கவில்லை. எண்களைக் கொண்டும் மகிழ்விக்கலாம் என்பதை பார்வையாளர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்" என்றார் யாஷ்வின். தைவான் மாய வித்தைக் காரர் எரிக் சியன் வெற்றியாளர் விருதையும் 100,000 அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசையும் அள்ளிச் சென்றார்.
ஆசியத் திறனாளர் போட்டி: 'மனிதக் கணிப்பான்' யாஷ்வினுக்கு இரண்டாமிடம்
1 mins read
யாஷ்வின் சரவணன், 15 -

