கோலாலம்பூர்: மலேசியாவில் நெகிரிசெம்பிலான் மாநிலம், ரந்தாவ் தொகுதியில் சனிக்கிழமை இடைத்தேர்தல் நடந்தபோது போலிஸ் காரை வழிமறித்த சம்பவம் தொடர்பில் இருவரை போலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 52 வயதான கார் வியாபாரி என்றும் மற்றொருவர் 36 வயது லாரி ஓட்டுநர் என்றும் போலிசார் கூறினர். அந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் மூவரை போலிசார் தேடி வருகின்றனர். போலிஸ் காரை வழிமறிந்த ஐந்து பேர், காரில் வாக்குப்பெட்டிகள் எதுவும் இருக்கின்றனவா என்று சோதனை செய்ததாகக் கூறப் பட்டது. ரந்தாவ் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது போலிஸ் கார் வழிமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட சம்பவம் வீடியோவில் பரவியதைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் மீது போலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. போலிஸ் காரை வழிமறித்தவர் களில் ஒருவர் ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் மேலங்கி அணிந்திருந்தது வீடியோவில் தெரிந்தது. ரந்தாவ் தொகுதியில் சனிக்கிழமை நடந்த இடைத் தேர்தலில் இடைக்கால அம்னோ தலைவர் முகம்மது ஹசான் வெற்றி பெற்று அத்தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். அன்று போலிஸ் காரை ஐந்து பேர் தடுத்து நிறுத்திய செயல் சுற்றுக்காவல் பணியில் ஈடு பட்டிருந்த போலிஸ்காரர்களை தடுத்து நிறுத்திய சம்பவமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதுகுறித்து போலிசார் விசாரணை செய்து வருவதாகவும் போலிஸ்படைத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது கூறினார். போலிஸ் காரை வழிமறிக்க அந்த சந்தேக நபர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று போலிஸ் உயர் அதிகாரி கூறினார்.
மலேசியாவில் போலிஸ் காரை வழிமறித்த இருவர் கைது
2 mins read

