அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம், சிரியாவில் கடத்தப்பட்ட தனது பணியாளர்கள் மூவரைத் தேடுவதற்கான முயற்சியைத் தொடர்வதாக அறிவித்திருக்கிறது. அவர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்தவர்கள் முன்வந்து உதவுமாறு சங்கம் கேட்டுக்கொண்டது.
நியூசிலாந்தைச் சேர்ந்த தாதி திருவாட்டி லுயிஸா அகாவியும் சிரிய ஓட்டுநர்கள் அலா ராஜப், நபில் பக்டோன்ஸ் ஆகியோரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்டனர்.
லுயிஸா 2018ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இன்னும் உயிருடன் இருந்ததாக அண்மையில் கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஐஎஸ் அமைப்பின் கடைசி நிலப்பகுதியைக் கைப்பற்றியதாக அமெரிக்கத் துருப்பினர் கடந்த மாதம் அறிவித்தனர். 2014ஆம் ஆண்டு முதல் ஈராக்கிலும் சிரியாவிலும் நீடித்து வந்த ஐஎஸ்ஸின் ஆக்கிரமிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
2013ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி 'ரெட் கிராஸ்' வாகனத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது கிளர்ச்சியாளர்கள் சிலர் அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்தி அம்மூவரையும் கடத்திச் சென்றனர். அவர்களுடன் கடத்தப்பட்ட வேறு நான்கு பேர் அதே நாளில் விடுதலை செய்யப்பட்டனர்.
"தகவல் அறிந்தவர்கள் முன்வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எங்களது சகாக்கள் தடுக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக, நிபந்தனையில்லாமல் விடுதலை செய்யப்படவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுக்கொண்டது.