சிங்கப்பூரையும் கோலாலம்பூரையும் இணைக்கும் அதிவேக ரயில் சேவைத் திட்டம் அருமையாக இருந்தாலும் அது இப்போதைக்குத் தேவையில்லை என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார்.
சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் மட்டுமே இடைப்பட்ட இந்தச் சேவை மலேசியாவுக்கு இப்போது உண்மையில் தேவையில்லை என்று டாக்டர் மகாதீர் கூறினார். இந்தத் திட்டத்தால் மலேசியாவில் ஒருசில மாநிலங்கள் மட்டுமே பயனடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அதிவேக ரயில் சேவையை நாங்கள் இப்போது கட்டமாட்டோம். இருந்தபோதும், தற்போதைய ரயில் சேவையின் தரத்தை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இரட்டை ரயில் தடம், மின்சாரமயமாக்கல் ஆகிய வழிகளைக் கையாண்டு நாங்கள் சில மேம்பாடுகளைச் செய்திருக்கிறோம்," என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
செலவு கட்டுப்பாடுகள் காரணமாக இந்தத் திட்டத்தைத் தள்ளி வைக்குமாறு மலேசியா சிங்கப்பூரிடம் முன்னர் கேட்டிருந்தது. மே 2020ஆம் தேதி வரை திட்டத்தை ஒத்திவைக்க சிங்கப்பூரும் மலேசியாவும் கடந்த மாதம் இணங்கின. இதற்கான 15 மில்லியன் வெள்ளி இழப்பீட்டை மலேசியா சிங்கப்பூருக்கு வழங்கியது.