ஜோகூர் பாலத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கான வழி குறித்து மலேசிய அரசாங்கம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தெளிவான கண்ணோட்டத்தை அடையும் என்று மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரும் மலேசியாவும் பாலத்தில் ஏற்படும் நெரிசலைப் பற்றி கலந்துரையாடி இருப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுடின் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். நாள்தோறும் சுமார் 265,000 பயணிகள் இந்தப் பாலத்தைக் கடந்து செல்கின்றனர்.
சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது உள்ளிட்ட சில குறுகியகாலத் தீர்வுகள் ஆராயப்படுவதாகத் திரு சைஃபுடின் கூறினார். ஏப்ரல் 9ஆம் தேதி நிகழ்ந்த சிங்கப்பூர்-மலேசியா ஓய்வுத்தலச் சந்திப்பில் மற்ற பல விவகாரங்களுக்கு இடையே ஜோகூர் பாலத்தில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சினை பற்றியும் பேசப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இரு நாட்டுத் தலைவர்களும் அந்தச் சந்திப்பின்போது தங்களது கடப்பாட்டைத் தெரிவித்தனர்.
1962ஆம் ஆண்டு கையெழுத்தான ஜோகூர் ஆற்றுநீர் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையின் அடுத்தக் கட்டத்திற்கு சிங்கப்பூர் செல்லும் என நம்புவதாகத் திரு சைஃபுடின் தெரிவித்தார். தண்ணீர் விலை குறித்து சிங்கப்பூர் தனது நிலைப்பாட்டை இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டார். பேச்சுவாரத்தை சரிவராவிட்டால் இரு நாடுகளும் அனைத்துலக நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிவரும் என்றும் அவர் சொன்னார்.