பாலியில் அகுங் எரிமலை குமுறல்

பாலியில் அகுங் எரிமலை குமுறல்

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பாலித் தீவில் உள்ள அகுங் எரிமலை நேற்று வெடித்து குமுறியதைத் தொடர்ந்து அப்பகுதியில் சாம்பலும் புகை மூட்டமும் வானில் அதிக உயரத்திற்கு பரவியிருப்பதாக அதிகாரிகள் கூறினர். நேற்று அதிகாலை அந்த எரிமலை வெடித்து குமுறத் தொடங்கியதை அடுத்து அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை தவிர்க்குமாறு மக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறினார். எரிமலை கக்கும் கரும் புகையினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஆயிரக்கணக்கான முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்தப் பேச்சாளர் கூறினார். அகுங் எரிமலையின் சீற்றத்தால் விமானச் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார். ஜாவாவில் உள்ள இரு எரிமலைகள் வெடித்து குமுறத் தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று அவர் சொன்னார். அகுங் எரிமலையின் சீற்றம் தொடர்ந்து அபாய கட்டத்தில் இருப்பதால் மலையேறிகள் தற்போதைக்கு பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று ஆலோசனை கூறப் பட்டுள்ளது. அந்த எரிமலை 1963ஆம் ஆண்டு வெடித்து குமுறியபோது 1,100 பேர் உயிரிழந்தனர்.