நாகாசாக்கி: புகைபிடிக்கும் பழக்கமுடைய பேராசிரியர்கள் அல்லது ஆசிரியர்களைத் தான் பணியில் அமர்த்தப்போவதில்லை என்று ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும், ஆசிரியர் பதவியில் சேர்ந்த பிறகு புகை பழக்கத்தைக் கைவிட விண்ணப்பதாரர்கள் வாக்குறுதித் தந்தால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று நாகாசாக்கி பல்கலைக்கழக அதிகாரிகள் கூறினர்.
இம்மாதம் 19ஆம் தேதி நடப்புக்கு வந்த இந்தப் புதிய கொள்கை, ஜப்பானில் அனைத்துப் பொது இடங்களிலும் புகைபிடிப்பதைத் தடை செய்ய முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் ஒரு பகுதியாக அமைகிறது.
"பல்கலைக்கழகமாக எங்களது பணி மனிதவளங்களைப் பேணி வளர்ப்பதே. புகைபிடிக்கும் பழக்கத்தை மக்கள் நிறுத்த வேண்டும் என்பதில் எங்களுக்குச் சமூகப் பொறுப்புணர்வு இருக்கிறது," என்று நாகாசாக்கி பல்கலைக்கழகத் தலைவர் ஷிகேரு கோனோ கூறினார்.
இதுபோன்ற ஒரு கொள்கையைத் தன்னாட்சி பல்கலைக்கழகம் ஒன்று நடைமுறைப்படுத்தியதை இதுவரை தான் கேள்விப்பட்டதில்லை என்று அந்நாட்டின் சுகாதார, தொழிலாளர் அமைச்சு அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டார்.
நாகாசாக்கி பல்கலைக்கழக வளாகத்தில் புகைபிடிப்பதற்கான தடை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடப்புக்கு வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சிகரெட்டுகள் அல்லது தீ மூட்டிகளைக் கொண்டுசெல்ல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்படாது.
அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் தற்போது எட்டு விழுக்காட்டினர் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.