கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

1 mins read

கராகஸ்: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

கொலம்பியாவின் கவுகா பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், நதிகளின் ஓரத்தில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 17 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும் பலர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போனதாகவும் அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொலம்பியாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி ஏறக்குறைய 100 பேர் உயிர் இழப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.