செய்தித்தாள் துறையில் வர்த்தக வெற்றியைச் சாதித்த பெருஞ்செல்வந்தர் வாரன் பஃபெட், அந்தத் துறை தற்போது சரிந்து வருவதாக நினைக்கிறார். பெரும்பாலான செய்தித்தாட்களைக் காப்பாற்றுவது இயலாத காரியம் என்றும் அவை நிறுத்தப்படுவதற்கான அபாயம் காலப்போக்கில் அதிகரிக்கும் என்றும் திரு பஃபெட் தெரிவித்திருக்கிறார்.
முன்பு செய்திகளை வழங்கும் ஒரே ஊடகமாகத் திகழ்ந்த செய்தித்தாள் துறை, இப்போது கடுமையாகப் போட்டிப்போட்டு நிலைக்கவேண்டிய சூழலில் இருப்பதாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். செய்தித்தாட்களின் குறைந்து வரும் விளம்பர வருவாய் இதற்குக் காரணம் என்றார் திரு பஃபெட்.
முன்பெல்லாம் வேலை தேடுவதற்காகவும் விலைக்கழிவுகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காகவும் பெரும்பாலான மக்கள் செய்தித்தாட்களை வாங்கி மும்முரமாகப் படித்ததாகத் திரு பஃபெட் தெரிவித்தார். ஆனால், இப்போது மக்கள் இணையத்தை அதிகம் நாடுவதால் விளம்பரதாரர்கள் தங்களது அச்சு விளம்பரங்களைக் குறைத்து வருவதாக அவர் கூறினார்.
2016ஆம் ஆண்டில் செய்தித்தாள் துறையின் விளம்பர வருவாய், பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த 49 பில்லியன் டாலரிலிருந்து 18 பில்லியன் டாலருக்குக் குறைந்ததாக பியூ ஆய்வு நிலையத்தின் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
"செய்தித்தாளில் வாசகர்களுக்கு மிகவும் பிடித்தது விளம்பரங்கள்தான். இதை நான் சொன்னால் செய்தியாளர்கள் வருத்தமடைவர்," என்றார் திரு பஃபெட்.
இருந்தபோதும் அனைத்துச் செய்தித்தாட்களும் அழிந்துபோகாது என்றார் அவர். அமெரிக்காவில் 'நியூயார்க் டைம்ஸ்', 'வாஷிங்டன் போஸ்ட்', 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' ஆகியவை நீடித்து நிலைத்திருக்கும் என்பது அவரின் கருத்து.