இந்தோனீசிய பொதுத்தேர்தலில் அதிக அளவு உழைத்த நூற்றுக்கும் அதிகமான தேர்தல் பணியாளர்களும் போலிசாரும் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் நடைபெறும் உலகின் ஆகப் பெரிய பொதுத்தேர்தலான இந்தத் தேர்தலின் முடிவுகளை மறுஆய்வு செய்யும்படி கோரிக்கைகள் எழுந்துள்ள நேரத்தில் இத்தகவல் வெளிவந்துள்ளது.
ஏப்ரல் 17ஆம் தேதியன்று நடந்த இத்தேர்தலில் கிட்டத்தட்ட 20,000 பதவிகளுக்காகச் சுமார் 245,000 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக இந்தோனீசிய பொதுத்தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தலுக்குப் பின் இதுவரை 139 தேர்தல் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் 500க்கும் அதிகமானோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் அரசியல், சட்ட, பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் விராந்தோ தெரிவித்தார்.
தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்ற 193 மில்லியன் பேரில் கிட்டத்தட்ட 81 விழுக்காட்டினர் வாக்களித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வாக்குகடள தற்போது எண்ணப்பட்டு வரும் வேளையில் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ சுமார் 10 விழுக்காடு முன்னிலையில் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.