பாசிர் கூடாங்கிற்கு அருகிலுள்ள சுங்கை கிம் கிம் ஆற்றின் ரசாயனத் தூய்மைக்கேட்டுச் சம்பவத்தின் தொடர்பில் தேடப்பட்டு வந்த சிங்கப்பூரர் கடந்த மாதம் மலேசிய போலிசாரிடம் சரண் அடைந்துள்ளார். அந்த 49 வயது நிறுவன இயக்குநர் ஜோகூர் பாருவின் செரி அலாம் மாவட்டத்திலுள்ள போலிஸ் தலைமையகத்தில் சரண் அடைந்ததாக ஜோகூர் மாநில போலிஸ் துணைத்தலைவர் முகம்மது கமருடின் முகம்மது டின் தெரிவித்திருக்கிறார். சந்தேக நபர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பாசிர் கூடாங் ரசாயனக் கசிவு சம்பவத்தில் 3,500க்கும் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டனர். கிட்டத்தட்ட 111 பள்ளிகள் வேறு வழியின்றி தற்காலிகமாக அடைக்கப்பட்டன.
சுங்கை கிம் கிம் ஆற்றில் ரசாயனப் பொருட்களை வீசியதன் தொடர்பில் ஏற்கனவே இரண்டு இயக்குநர்களும் ஒரு லாரி ஓட்டுநரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அந்த இயக்குநர்களில் ஒருவர் சிங்கப்பூரர்.