கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான ஊழல் வழக்கில் அவர் மீது சாட்டப் பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்த ஒரு குற்றச்சாட்டை திருத்தி அமைப்பது அல்லது ரத்து செய்வது என்பது குறித்து உயர் நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை தீர்மானிக்க உள்ளது.
வழக்கு விசாரணையில் இரு தரப்பும் அவர்களின் இறுதி வாதத்தை முடித்துக்கொண்ட பிறகு நீதிபதி முகம்மது மஸ்லான் தனது முடிவை அறிவிப்பார் என்று நீதிமன்றத் தகவல் கூறியது.
திரு நஜிப் மீது சாட்டப்பட்டுள்ள நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு கள் தெளிவாக இல்லை என்றும் அந்தக் குற்றச்சாட்டுகளில் குறிப்பிட்ட விவரங்கள் இல்லை என்றும் நஜிப்பின் வழக்கறிஞரான முன்னாள் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி முகம்மது யூசோப் ஜைனல் அபிடின் நீதிமன்றத்தில் வாதிட்டார். இதனால் அந்த குற்றச்சாட்டுகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நஜிப் மீதான குற்றசாட்டுகளில் ஐந்து விதமான நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் எவை என்பதை அரசாங்கத் தரப்பு குறிப்பிடத் தவறி விட்டதாகவும் வழக்கறிஞர் ஜைனல் அபிடின் கூறினார்.
திரு நஜிப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளும் ஒரே சமயத்தில் விசாரணை செய்யப்பட முடியாது என்று நஜிப்பின் மற்றொரு வழக்கறிஞரான கமருல் ஹிசாம் கமருதின் வாதிட்டார்.
இந்நிலையில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் வி.சிதம்பரம், நஜிப் மீது சாட்டப்பட்டுள்ள நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் தெள்ளத்தெளிவாக இருப்பதாகப் பதில் அளித்தார்.
பல்வேறு குற்றங்களுக்கு பலவிதமான குறிப்பிட்ட சட்டங் களை நாடாளுமன்றம் உருவாக்கி யிருப்பதாகக் கூறிய திரு சிதம்பரம், ஒவ்வொரு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் கொண்டு வருவது நியாயமானதே என்று கூறினார். இருப்பினும் நீதிபதி முகம்மது மஸ்லான், நஜிப் மீதான நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தாமதமின்றி தொடங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

