ஹனோய்: கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பந்தயத் தொகையை இணைய சூதாட்டம் வழி பெற்ற கும்பல் ஒன்றை வியட்நாமிய போலிசார் முறியடித்துள்ளனர்.
இதன் தொடர்பில் மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. வியட்நாமில் பெரும்பாலான சூதாட்ட வகை கள் சட்டவிரோதமானவை. ஆனால் கள்ளச் சந்தையில் பந்தயம் கட்டுவதற்கு பெரும் வரவேற்பு இருந்து வருவதாகவும் குறிப்பாக விளையாட்டுகள் தொடர்பில் பந்தயங்கள் கட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
முறியடிக்கப் பட்ட சூதாட்டக் கும்பல் இதுவரை அதிநவீன முறையில் இயங்கி வந்ததாகவும் அதனாலேயே அதைக் கண்டுபிடிக்கச் சிரமமாக இருந்ததாகவும் போலிஸ் பேச்சாளர் கூறினார். சென்ற ஆண்டு இதே போல் வேறொரு சூதாட்ட சம்பவத்தில் உயர் போலிஸ் அதிகாரிகள் உட்பட 91 பேர் கைதுசெய்யப்பட்டனர்.