ஜப்பானியப் பேரரசர் அக்கிஹிட்டோ செவ்வாய்க்கிழமை (30 ஏப்ரல்) முடிதுறக்க உள்ளார். 85 வயது அக்கிஹிட்டோவுக்குப் பதிலாக அவரது மூத்த மகன் 59 வயது நருஹித்தோ அரியணை ஏறுவார்.
1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் அக்கிஹிட்டோ மன்னராக முடிசூட்டப்பட்டார்.
முடிதுறப்பு விழா செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்தேறும். பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பானின் நாடாளுமன்றத் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்வர்.
ஆண்சுரப்பி புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றுக்காக மருத்துவ சிகிச்சை பெற்ற அக்கிஹிட்டோ, இந்தக் காரணத்தால் பேரரசராகத் தொடர்ந்து பணியாற்ற சிரமப்படலாம் என அஞ்சுவதாக 2016ஆம் ஆண்டில் ஆற்றிய தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார்.
அரசியல் அதிகாரம் இல்லாமல் அரியணை ஏறிய முதல் ஜப்பானிய மன்னராக அக்கிஹிட்டோ திகழ்கிறார். இருநூறு ஆண்டுகளில் ஜப்பானிய மன்னர் ஒருவர் முடிதுறப்பது இதுவே முதல் முறை. அவரது தந்தை ஹிரோஷித்தோ தலைமையில் நடந்த இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் பல்வேறு நாடுகளின் மீது படையெடுப்பு நடத்தியது. அப்போதைய ஜப்பானிய மக்களால் நடமாடும் தெய்வமாகக் கருதப்பட்ட ஹிரோஷித்தோ, 1945ஆம் ஆண்டு ஜப்பான் போரில் தோற்ற பிறகு தமக்குத் தெய்வத்தன்மை இல்லை என அறிவித்தார்.
நவீன உலகிற்குள் அடியெடுத்து வைத்த ஜப்பானில் அமைதி, மன்னிப்பு, ஜனநாயகம் ஆகியவற்றை அக்கிஹிட்டோ வளர்க்க முற்பட்டதாக வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர். சாதாரண குடிமகள் ஒருவரைத் திருமணம் செய்து அவரை அரசியாக்கிய முதல் ஜப்பானியப் பட்டத்து இளவரசராக அக்கிஹிட்டோ இருந்தார். நாட்டில் பேரிடர் நிகழ்ந்த சமயங்களில் நொந்துபோன மக்களுக்கு அக்கிஹிட்டோ அளித்த ஆறுதல் குரல் அவர் மீதான நல்லபிமானத்தை வானளவு உயர்த்தியது.
பேரரசருக்கும் அவரது துணைவியாருக்கும் தங்களது உளங்கனிந்த பாராட்டுதலை வெளிப்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அவரது மனைவி மிலானியா டிரம்ப்பும் தெரிவித்தனர்.