மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிரான இரண்டாவது நீதிமன்ற விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 'எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்' நிறுவனம் தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக நீதிமன்றம் இதனை ஒத்திவைத்தது.
12ஆம் நாளில் இருக்கும் 'எஸ்ஆர்சி' வழக்கு, மே 10ஆம் தேதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய 1எம்டிபி நிறுவனத்தின் தொடர்பில் 2.28 பில்லியன் ரிங்கிட் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது தொடர்பில் அவர் குற்றம் சாட்டப்படுகிறார். இனியும் இந்த வழக்கை இழுத்தடிக்கக் கூடாது என்று நீதிபதி கொல்லின் லாரன்ஸ் சிகுவேரா தெரிவித்திருக்கிறார்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை அந்த விசாரணை ஒவ்வொரு நாளும் நடக்கவேண்டும் என்றும் அந்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

