பெட்டாலிங் ஜெயா: மலேசியா தேடி வரும் வர்த்தகர் ஜோ லோ, 1எம்டிபி நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக் கூறப்படும் 1.7மில்லியன் அமெரிக்க டாலர் (S$ 2.3 மில்லியன்) மதிப்புள்ள வைர நகைகளை அவரின் தாயார் அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்படைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைரத் தோடு, வைர மோதிரம் ஆகியவற்றை ஜோ லோவின் தாயார், அமெரிக்காவிடம் ஒப்படைத்திருப்பதாக நீதித்துறை தகவல் தெரிவித்தது. 1எம்டிபி நிதி முறைகேடு தொடர்பில் ஜோ லோவை மலேசிய அரசாங்கம் தேடி வருகிறது. அவர் எங்கு தலைமறைவாக உள்ளார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் சீனாவில் இருப்பதாக முன்பு தகவல் வெளியானது. ஆனால் அவர் அடிக்கடி இடம் மாறுவதால் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய முடியவில்லை என்று மலேசியப் போலிசார் தெரிவித்துள்ளனர்.

