ரமலான் மாதம் சாப்பிடாமல் நோன்பு இருப்பதைப் பற்றியது மட்டுமல்ல, தவறு செய்யத் தூண்டும் எண்ணங்களை எதிர்கொள்வதையும் பற்றியது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார்.
"ஊழல் போன்ற தீயச் செயல்களிலிருந்து விலகி இருக்க முஸ்லிம்கள் நோன்பு மாதத்தைப் பயன்படுத்தவேண்டும்," என்று டாக்டர் மகாதீர் திங்கட்கிழமை (மே 6) பிரதமர் அலுவலக ஊழியர்களிடம் உரையாற்றியபோது கூறினார்.
"நமது ஆசைகளையும் மனத் தூண்டுதல்களையும் கட்டுப்படுத்தக் கற்றுத் தருவது நோன்பு. மனதின் தூண்டுதல்கள் நம்மைத் தீயச் செயலில் ஈடுபட வைக்கின்றன. இத்தகைய தூண்டுதல்களை எதிர்கொண்டு போராட நாம் தவறினால், ஊழல் போன்ற தீயச் செயல்களில் ஈடுபட்டு பிரச்சினைகளுக்கு ஆளாகலாம்," என்றார் டாக்டர் மகாதீர்.
புலன்போகும் வழிகளில் போகாமல் சுயக் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள அத்தனை மலேசியர்களாலும் முடியுமானால் உலகம் மலேசியாவை மதிக்கும் என்று டாக்டர் மகாதீர் கூறினார். அப்போது மலேசியர்கள் நாணயமானவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் அதனால் நற்பலன்களை அடைவார்கள் என்றும் அவர் சொன்னார்.